Wednesday, August 30, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்

குடித்து மிச்சமிருந்து
புளித்துத் திரண்டிருந்த
அரைக் கோப்பை பால்
பாவித்தும் தூக்கியெறியப்படாத
நொய்ந்த ஆணுறை
படித்தும் படிக்காததுமாய்
பரப்பிக் கிடந்த பத்திரிகைகள்
உடைத்த பிஸ்கட் பக்கட்டுக்கள், சப்பாத சுவிங்கங்கள்
புதிதாய் பின்னப்பட்டிருந்த சிலந்தி வலைகள்
தண்ணீர் காணாத
ஒற்றை ரோஜா செடி - என்பனவாய்
வயதிற்கு வந்த நாள் முதல்
நான் சேமித்த பொறுமைகளை சோதிக்க
வீடு முழுக்க இறைந்து கிடந்தன
உன் ஆண்மையும் அகங்காரங்களும்
என் நோய்வாய்ப்பட்ட ஒரு வாரத்தில்.
பறவைகளுக்குத் தான் சிறகுகள்
வேலைக்கார பெண்டாட்டிகளுக்கு ஏது அவை?
ஆனாலும் - இன்னும் இருக்கிறது ஆகாயம்
விரிந்து பரந்து என் ஆகாயம் மட்டும்.

Monday, August 21, 2006

Poem in Kalachuvadu

http://www.kalachuvadu.com/issue-80/kavithai05.htm

Poems in Vaikarai-Canada

http://www.vaikarai.com/103/Issue-103%2030.pdf

Friday, August 18, 2006

Short Story :லாவண்யா VS வைகுந்தன்

கண்களின் குறும்பு உதடுகளில் ஒட்டியிருக்க அறைக்குள் நுழைந்தாள் லாவண்யா.
மெல்லியதாகப் படபடக்கும் விரல்களினால் பாத் ரூம் கதவைச் சாத்தியவள், “சொறி லேட்டாயிட்டா? ” என்றாள்.
லாப் டொப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த வைகுந்தன் “பரவாயில்லை வாங்க, வணக்கம்” என்றான் பதிலுக்கு. குரலில் பதட்டமா பரவசமா கண்டுகொள்ள முடியவில்லை அவளுக்கு.
சில நொடி மௌனம். யாராவது கலைக்க வேண்டுமே…

“என்ன கமல்ஜீயோட படமா பாக்கிறீங்க? ” என்ற லாவண்யாவின் கேள்விக்கு “ ஐயோ அம்மா இந்தா இப்பவே மூடி வைக்கிறன். சும்மா நீர் வரும் வரையும் பொழுது போக வேணும் எண்டு தான் பாட்டுக்களை மட்டும் தட்டிப் பாத்துக் கொண்டிருந்தனான். எனக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணேலாது” என்று சொல்லியபடியே லாப் டொப்பை மூடி பண்ணி மேசையில் வைத்தான். விட்டால் அவளும் சேர்ந்து பார்க்கத் தொடங்கி விடுவாள் என்பது அவனுக்குத் தெரியும்.

இன்னும் அந்த குறும்புச் சிரிப்பு அப்படியே அவளிடம் ஒட்டியிருந்தது. “ சரி பெண்டாட்டி இப்ப சொல்லுங்க” அருகில் வந்தமர்ந்து அவளது விரல்களைப் பிடித்தவனிடம் பிடுங்கித் தின்ற வெட்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் “ வைகுந்தன் சூடா ஒரு ப்ளாக் கோப்பி குடிக்கலாமா? ” என்றாள்.

“என்னப்பா நீர், இரவு ஏழு மணிக்கு கல்யாண பங்ஷன் முடிஞ்சு டினர் சாப்பிட்டு எல்லாரோடையும் படம் எடுத்து சாத்திர சம்பிரதாயம் முடிச்சு ஹோட்டலுக்கு வர 11 மணி. பிறகு குளிச்சுத்தான் வருவன் எண்டு அடம் பிடிச்சு இப்ப 11.45க்கு இவ்வளவு லேட்டா பெஸ்ட் நைட்டுக்கு வந்து பக்கத்தில இருந்திட்டு இப்ப என்ன கோப்பியா வேணும்? ” என்றான் டென்ஷனுடன் கோபம் காட்டி.

“இல்ல கோவமா இருக்கிறீங்க போல இருக்கு. எனக்கு கோப்பி வேண்டாம். லேசா தலையிடிக்குது. அது தான் கேட்டனான் பரவாயில்ல” என்றாள் சமாளித்தபடியே.

“என்ன தலையிடிக்குதா மருந்து கொண்டந்தனீரா?” என்று பதறிய படியே ரூம் சேர்விஸிடம் கோப்பிக்கு டெலிபோனிலேயே ஓடர் பண்ணிவிட்டு மீண்டும் பக்கத்தில் வந்தமர்ந்தான்.
“முதல் நாளே இந்தப் பாடு படுத்துறீர்” என்றபடி ரூம் போ(B)ய் கொண்டு வந்த கோப்பித் தட்டை வேண்டி மேசையில் வைத்துவிட்டு கதவைச் சாத்தினான்.

கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தவளின் இடுப்பை முழங்காலில் நின்று அணைத்தபடி “ ப்ளீஸ் கோப்பி குடிக்க முதல் ஒரு முத்தம்” என்றான்.அவ்வளவு அருகில் அவ்வளவு காதலுடன் வைகுந்தனின் கண்களை அவளால் சந்திக்க முடியவில்லை.
சிறிது திமிறி “ஐயோ வெக்கமா இருக்கு விடுங்களேன் ப்ளீஸ்” என்றாள். ஆனால் கைப்பிடி இறுகியதே ஒழிய தளரவில்லை.
தன் மெல்லிய உதடுகளை அவன் உள்வாங்கிக் கொள்ள சில நொடிகள் தன் கண்களை மூடித்திறந்தாள்.
மெல்ல அவளை விடுவித்தவன் “ ஸொறி லாவண்யா உம்மட கோப்பி ஆறுது, எத்தனை ஸ்பூன் சீனி? ” என்றான்.

“இரண்டு” என்ற பதிலைத் தொடர்ந்து “ பல்கனியில் இருந்து குடிப்பமா? ” என்றவளுக்கு
மறுபேச்சில்லாமல் அவர்களது அறைக்கென்றே பிரத்தியேகமாக இருந்த பல்கனியைத் திறந்த வண்ணம் வெளியே வந்தவன் “ வா லாவண்யா” என கைகளை நீட்டினான்.

அவனுடைய விரல்களைப் பினைந்தபடியே கோப்பி குடித்து முடித்து எழுந்தவளை பின்பக்கமாய் அணைத்து நெஞ்சில் சாய்த்த படியே காதோரம் “ ஜ லவ் யூ” சொன்னவனுக்கு
“நானும்” என்று பதிலுக்குச் சொன்னவளை “ அப்ப ரூமுக்கு போவமா? ” என்றான் கெஞ்சலாக.

“கோவிக்காட்டி ஒண்டு கேக்கவா? ” என்று கேட்ட லாவண்யாவிடம் “ கேளுங்க தாயே இண்டைக்கு கோவமே வராது கேளுங்க” என்றான் கண்களால் சிரித்தபடியே.

“இல்ல தூரத்தில தெரியிறது தானே மரினா பே (MARINA BAY) ? அங்க வரைக்கும் நடந்து போயிட்டு வருவமா? ”

“ஏய் என்ன விளையாடுறியா? இண்டைக்கு பெஸ்ட் நைட். அதத்தான் விடு. தல இடிக்குது எண்டு கோப்பி எடுத்துத் தந்தன். இல்ல படுக்கப் போறன் எண்டு கேட்டாக் கூட சரி தாயே படும்மா எண்டு சொல்லியிருப்பன். இப்ப எத்தின மணி தெரியுமா? சாமம் 1.15. இப்ப போய் வோக் கேக்குது”

“இல்ல ப்ளீஸ் வைகுந்தன் ப்ளீஸ்” என்றாள்.
“ சரி நீர் தான் இண்டைக்குப் புரிஞ்சு நடக்கேல்ல அட்லீஸ்ட் நானாவது நடப்பமே வெளிக்கிடுங்க தாயே” என்றான்.

அவசர அவசரமாய் ஜீன்ஸ் ரீசேட்டுக்கு மாறி வந்தவளை பார்த்தபடி “ நாளேல இருந்து ஒழுங்கா புடவை கட்டி பூ வச்சு இருக்கோணும். மாமியார் பாத்தா ஏதாவது சொல்லப்போறா”

“சரி இண்டைக்கு மட்டும் ப்ளீஸ்” என்றவளை அணைத்த படியே ஹோட்டலை விட்டு இறங்கினான்.

அவளது விரல்களைப் பிடித்த வண்ணம் நடப்பது சந்தோஷமாக இருந்தது. புதிதாக இருந்தது. இவள் தானா எனது வருங்காலம் என்று நினைக்க வியப்பாக இருந்தது அவனுக்கு.
“இந்த ரவெல்ஸ் அவனியூ மரினா ஸ்க்யார் (RAFFLES AVENUE MARINA SQUARE) ரோட்டைத் தாண்டினா மரினா பே ( MARINA BAY) தானே? என்று கேட்டவளிடம்,

“ஏய் உனக்கு எப்பிடி ரோட்டுப் பெயரெல்லாம் தெரியும்? இது தானே உனக்கு பெஸ்ட் ரிப் சிங்கபூருக்கு? ” என்றான் வியப்பாக.
“இல்ல ஓரியன்டல் சிங்கப்பூரில (ORIENTAL SINGAPORE) தான் பெஸ்ட் நைட்டுக்கு ரூம் புக் பண்ணியிருக்கிறீங்க எண்டு சொன்னீங்க. அப்ப வெப்ல போய் பாத்தனான்” என்றாள் அமைதியாக.
வைகுந்தன் லாவண்யாவை மரினா பே ரெஸ்டோரன்ட் வரை நடக்க விட்டு விட்டு….

அவர்களைப் பற்றி :
வைகுந்தன் தொழில் நிமித்தம் சிங்கைக்கும், லாவண்யா மேற்படிப்பிற்காக ஜேர்மனிக்கும் வந்த பின்னர் தான் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டார்கள். அதுவும் வைகுந்தன் எடுத்த முயற்சியால் தான்! லாவண்யா வெளியிட்ட சிறுகதைத் தொகுதியை மிகச் சிரமப்பட்டு பெற்று அதற்கு விமர்சனம் எழுத அதுவே எழுத்து- விமர்சன உறவுக்கு வித்திட்டது. பின்னர் தான் இலங்கையில் ஒரே ஊரில் ஒரே காலத்தில் படித்தவர்கள் என்பது வைகுந்தன் சொல்லி லாவண்யாவுக்குத் தெரிந்தது. இப்போது 2 வருடங்களாக அவளின் அனைத்து எழுத்துக்களுக்கும் முதல் வாசகன் முதல் ரசிகன் அவன் தான். அவளின் எழுத்துக்களுக்கு விரிந்த பார்வை ஒன்றை பெற்றுக் கொடுத்திருந்தான் அவனைப் போலவே. ஒரு அவசர நாளின் மதிய இடைவேளையில் அவள் “ I THINK I LOVE U” என்று எஸ்.எம்.எஸ் அனுப்ப அவன் “நானும்” என்று பதிலுக்கு அனுப்ப அதுவே காதலாகி கல்யாணம் முதலிரவு வரை கொண்டு வந்து விட்டிருந்தது…

சரி வைகுந்தனும் லாவண்யாவும் மரினா பே இரவு ரெஸ்டோரன்ட் ஒன்றின் வெளி முற்ற இருக்கையில் அமர்ந்து இருக்கிறார்கள். சந்திப்போம்.
“ஏய் லாவண்யா நீர் சரியான வித்தியாசமா இருக்கிறீர். பெஸ்ட் நைட்ல புருஷனைக் கொண்டு வந்து காத்து வாங்க விட்டிருக்கும் முதல் பெண்டாட்டி நீர் தான் ” என்றவனிடம் நெருங்கி அமர்ந்து அவனது தோளில் தலையைச் சாய்த்து அவனது வலக்கையை தனது இரு கைகளாலும் கட்டிப் பிடித்தபடி “ வைகுந்தன் இப்ப சொல்லுங்க ” என்றாள்.

கையில் கட்டியிருந்த கடிகாரம் 2.10ஐ காட்டியது.
“என்ன சொல்ல லாவண்யா அது தான் 2 வருஷம் உழச்ச காசெல்லாம் உமக்கு ஜேர்மனிக்கு கோல் பண்ணியே கரைச்சு முடிச்சிட்டன். இப்ப காசுமில்ல கதையுமில்ல. நீர் தான் இனி உழச்சு எனக்கு கஞ்சி ஊத்தோணும்”

“அதுக்கென்ன கஞ்சி தானே ஊத்திட்டா போச்சு” என்றவள் “எனக்கு முதல் யாரையும் லவ் பண்ணியிருக்கிறீங்களா? ” அதே இறுக்கிய அணைப்புடன் புன்னகைத்தபடி கேட்டாள்.
“என்ன திடீர் எண்டு”

“இல்ல சும்மா கேக்கிறன்”
“முதலே சொன்னான் தானே. ஊரில ஒண்டு ரெண்டு பேர். நெருக்கம் தான். காதல் எல்லாம் இல்ல. கல்யாணம் கட்டேணும் எண்டெல்லாம் யோசிக்கேல்ல. உம்ம சந்திச்சா பிறகு தான் எல்லா ஆசையும் வந்தது”

“நெருக்கம் எண்டா”
“அந்த இரண்டு பேரோடையும் ஒண்டா இருந்தனான்”
“ஒண்டா எண்டா? ”
“ஒண்டா எண்டா ஒண்டா”
“என்ன செக்ஸ் வச்சிருந்தீங்களா? ”
“ம்”
“எப்பிடி? ”
“ரூமுக்கு வந்தீரெண்டா எப்பிடி எண்டு காட்டுவன்”
கண்களால் சிரித்தபடியே “ அது எப்பிடி எண்டு எனக்குத் தெரியும். இல்ல பிறகேன் அவங்கள கைவிட்டனீங்க? பாவம் இல்லயா? ”
“பாவமா? ஒரு பொம்பிளய காதலிக்கிறன் கல்யாணம் முடிக்கிறன் எண்டு சொல்லி போட்டு யூஸ் பண்ணினாத் தான் தப்பு. ஆனா நான் அப்பிடி ஒண்டும் செய்யேல்லயே. அந்த வயசில தேவை, தாகம் இருந்துது. அது தான். ஒராளுக்கு என்ன விட வயது வேற கூட. மற்றது சின்னப்பிள்ள”
“ஜயோ கொண்டம்ஸ் பாவிச்சீங்களா அந்தப் பிள்ளக்கு பிரச்சனை ஒண்டும் வரேல்லயே” என்றாள் பதட்டத்துடன். “ம்” என்றான் தர்ம சங்கடத்துடன்.

“அவ்வளவும் தானா? இங்க சிங்கபூரில ஒண்டும் இருக்கேல்லயா? ”
“இருந்தது. உம்மோட நல்லா பழகின இந்த ஒண்டரை வருசத்துக்கு முதல்”
“யாரோட? ”
“ இங்க காசுக்குத்தானே போனது. பெரிசா கோப்பரேட் பண்ணமாட்டாளுகள். விசர் தான் வரும.; ஒரு 10- 15 தரம் இருக்கும். ஆனா ஊரில இருந்த மாதிரி இல்ல.”

சிரித்தபடியே “காசக்குப் போன அப்பிடித்தானே இருக்கும். அவங்க எப்பிடி காதலோட கனியோனும் எண்டு எதிர்பாப்பீங்க? ”
“அது தான் எல்லாத்துக்குமாக நீர் வந்திட்டீர் தானே. இனி எல்லாம் நீ தான் லாவண்யா” இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“கதை எழுதுற பெண்டாட்டி இருக்கிறது ஒரு விதத்துக்கு நல்லம். இப்ப பாரும் எல்லாத்தையும் ஓபனா கதைக்க முடியுது. ஆனா பெஸ்ட் நைட் அண்டைக்கு கிறுக்குத் தனமா ராத்திரியெல்லாம் அவளோட ரோட்டில திரிய வேண்டிக் கிடக்கு” என்றான் தொடர்ந்து.

“எனக்கு ஒரு டவுட்”
“என்ன திரும்பவுமா? மணி இப்ப 3.20”
“இல்ல இப்பிடி போறது சரியா தப்பா? ”
“குஷ்பூட்ட தான் கேக்கோணும். அதுக்கெண்டு இருக்கிற ஆக்களிட்ட போறது தப்பில்ல எண்டு நினைக்கிறன். அதுவும் உன்னப் போல ஒரு பெண்டாட்டி வந்து அமையுறதா இருந்தா தப்பேயில்ல” சொல்லிவிட்டு வாய் விட்டுச் சிரித்தான்.
“அப்ப ஊரில போன இரண்டு பேர்? ”
“அது அவையளும் சேந்து தான் போர்ஸ் பண்ணினவங்க”
“ஓ! இல்லாட்டி நீங்க சின்ன பிள்ள. போயிருக்க மாட்டீங்க”
“என்ன லாவண்யா செல்லம் கோவிகிறீரா? இந்த ஒண்டரை வருசமா நல்ல பிள்ளயா தானே இருந்தனான்”
“சீ! கோவம் இல்ல. சும்மா கேட்டனான்” என்று அவனது வலது கையில் மிருதுவாக முத்தமிட்டவள் “ இன்னொரு டவுட்” என்றாள்.

“என்ன? ”
“ நீங்க இங்க சண்டே ஸ்கூல ரிலிஜன் படிப்பிக்கிறீங்க தானே? ”
“ம்”
“எப்பிடி பிள்ளையளுக்கு மோரல்ஸ் சொல்லிக் குடுப்பீங்க? ”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? ”
“ இல்ல நாம பொய் சொல்லாம இருந்து பிள்ளையளுக்கு பொய் சொல்லக் கூடாது எண்டு சொல்லிக் குடுப்பம். நாம பெரியவங்கள மரியாத செய்து பெரியவர்களை கனம் பண்ணு எண்டு சொல்லிக் குடுப்பம். சைவ சமயத்தில பஞ்சமா பாதகங்கள் இருக்கே! அத செய்யக் கூடாது எண்டு சொல்லிக் குடுக்கேக்க நாம தப்பு செய்யாம இருந்தா தானே ஏலும். நம்மளால செய்ய முடியாதத எப்பிடி பிள்ளையளுக்கு சொல்லிக் கொடுக்கிறது? இல்ல இதெல்லாம் தப்பு எண்டு சமயத்தில சொல்லியிருக்கு ஆனா உங்களால முடியாட்டி நீங்க தப்பு செய்யலாம் என்னப் போல எண்டு சொல்லிக் குடுப்பீங்களா? ”

திரும்பி அவளை ஆழமாகப் பார்த்தவன் அவளது கைகளை எடுத்து தனது கைக்குள் வைத்தபடி சில விநாடிகள் அமைதியாக இருந்தான்.
“லாவண்யா” என்றான் மெதுவாக.
“என்ன? ”
“தாங்கியூ. நீ என் பெண்டாட்டியா வந்திருக்கிறது சந்தோஷமா இருக்கு. நீ என் பக்கத்திலேயே இரு போதும். அடுத்த சண்டே ஸ்கூல் கிளாசில சுத்தமான மனசோட படிப்பிக்கிறன்”
“தாங்கியூ” என்றவள்” “என்னப் பற்றி ஒண்டும் கேக்க மாட்டீங்களா? ”
“ஊரில உமக்குப் பின்னால சுத்தின ஆக்கள தெரியும். பிறகு நீரா சொன்ன ஒண்டு இரண்டு காதல் கத தெரியும்”

“அது இல்ல. கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் இருந்ததா எண்டு கேக்க மாட்டீங்களா? ”
“ஏய் என்னட்ட அடி வாங்கப் போறீர்;. கல்யாணத்துக்கு உடுத்திக் கொண்டு நாள் பூரா போஸ் குடுத்த களைப்பு. இப்ப இரவிரவா வேற நித்திர கொள்ளேல்ல. எழும்பு லவண்யா ப்ளீஸ்”
“என்னட்ட கேளுங்களன். ப்ளீஸ். நீ யாரோடையும் இருந்தனியா எண்டு கேளுங்களன்”

“ஏய் விளயாடாத லாவண்யா. எழும்பு” என்று அவளை பலவந்தமாக அணைத்துத் தூக்கியபடி ஓரியன்டல் சிங்கப்பூரை நோக்கி நடந்தான்.
விடியலின் சாயல் ஆங்காங்கே தெரிந்தது.
“என்ன லாவண்யா சைலன்ஸ்? வரேக்க வந்த மாதிரி இல்ல ”

“ இல்ல அப்பிடித்தான் வாரன்” என்றாள் வலுக்கட்டாயமாக்கிய சிரிப்புடன்.
தோளை மெதுவாக அணைத்தவன் “ நீ என் வாழ்கைடா செல்லம். நீ நிறைய எழுதோணும். நான் உன் பக்கத்திலேயே இருக்கோணும். உன்னப் பற்றி அப்பிடி யோசிக்கக் கூட என்னால ஏலாது.
பெஸ்ட் நைட் தான் இல்லாமப் போச்சு பெஸ்ட் டோனாவது (DAWN) இருக்கா? ” என்றவனை மீண்டும் காதலுடனும் டென்ஷனுடனும் பார்த்தாள்.

22 வயதில் வயிற்றில் வந்த கருவை தனியே சென்று வலிக்க வலிக்க கலைத்த உண்மையைச் சொல்லாமல் பெஸ்ட் டோனுமில்லை பெஸ்ட் டஸ்க்கும் ( DUSK) இல்லை என்று தீர்மானித்தவளாக!!!

மணி இப்போது 5.25.

Wednesday, August 09, 2006

Short Story :“தீர்ப்பிற்கு வராத வழக்கு”

இன்று தான் முதற்தடவையாக “கோர்ட்”டுக்குச் செல்லும் வாய்ப்பொன்று கிடைத்திருந்தது. வாய்ப்பு என்பதை விட கட்டாயம் என்று சொல்வது யதார்த்தத்திற்குப் பொருந்தும்.
என்னுடைய அக்காவைக் கைப்பிடித்தவனின் அட்டூழியங்களில் இருந்து அவளை விடுவிப்பதற்காக அவளது சம்மதத்துடன் விவாகரத்து வழக்கிற்கு வந்திருந்தோம். பேசி முடித்த திருமணம் தான். இருந்தாலும் எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கும் என்று யார் கண்டது...?
எனக்குத் தெரிந்த நினைவு வரை விவாகரத்து வழக்கிற்காக யாருமே எமது குடும்பத்தில் இருந்து “கோர்ட்”டுக்கு வரவில்லை.
முதல் வழக்கு, திருமணமாகி ஒரு வருடம் கூடப் பூர்த்தியடையவில்லை போன்ற சில அடிப்படை “சென்டிமென்ட்”களினால் இந்த வழக்கு எல்லோரையும் நெகிழ வைத்திருந்தாலும், எனக்கென்னமோ ஒரு பாவமும் அறியாத அப்பாவி அவளை சந்தேகப்பட்டு உடல், உள ரீதியாக துன்புறுத்தி; “கணவன்” என்ற பெயரால் “கயவனாக” வாழ்ந்த ஒருவனிடமிருந்து அவளை மீட்கவேண்டும் என்ற உணர்வினால் அவளை சமாதானப்படுத்தியபடியே இருந்தேன்…
யார் என்ன சொன்னாலும் மனம் என்ற ஒன்று உண்டல்லவா…?
அவளிற்கு இது அதீத வலியைத் தந்தது என்பதை அவளது கண்களில் காணமுடிந்தது…
இருந்தும் அவளை தொடர்ச்சியாக ஆறுதல் படுத்தி “விடுதலை எண்டு நினையுங்கோ அக்கா” எனச் சொல்லியபடியே இருந்தேன்.
சிறிது தூரத்தில் “டை” கட்டி கல்யாண வீட்டிற்கு போவது போல வந்திருந்தான் எனதருமை அத்தான். அவனுடைய பிரச்சினையே எங்கு எப்படி வாழ்வது என்பது தெரியாதது தான்…
தான் யார் என்று கூட முழுமையாக புரிந்திராத அவனால் எப்படி என் அக்காவை வாழவைக்க முடியும்? என்ற கேள்வியோடு அவனில் நிலைகுத்தி நின்ற என் பார்வையைத் திருப்பிக் கொண்டேன்.
எனது அக்காவினுடைய இலக்கம் இறுதி கட்டத்தில் வரவேண்டியது என்பதால் அதுவரை நடந்த வழக்குகளில் நான் மூழ்கிப்போனேன்…
அது வேறு உலகம்! திருமணம், விவாகரத்து என்பதற்கெல்லாம் இருந்து வந்த பழைமை வாத கருத்துக்கள் தகர்த்தெறியப்பட்டுக் கொண்டிருந்தன…
கணவனின் பெயரை கூட தன் வாயினால் சொல்வது ஆகாது என்றிருந்த தமிழ் கலாச்சாரத்திற்கு அப்பால், இன்று ஆண்கள் செய்யும் கொடுமைகளை பட்டியலிட்டுச் சொல்வதற்கு உறுதியாக வந்திருந்தார்கள்.
காலம் மாறிப் போய்விட்டது என்பதை விட சந்தர்ப்பங்கள் அதிகரித்துவிட்டன என்றே கூற முடியும். ஏனெனில் இன்று பெண்கள் படித்திருக்கின்றார்கள், நாலு காசு சம்பாதிக்கின்றார்கள்…

காலம் பூராக கண்ணீரைச் சிந்திக் கொண்டு அவன் கட்டிய தாலியைச் சுமப்பதைவிட மெல்லிய புன்னகையுடன் தாலியில்லாமல் வாழ்வது ரொம்ப சௌகரியமாகவே போய்விட்டது.
ஒவ்வொரு வழக்குகளையும் பார்க்கப் பார்க்க “வாழ்க்கை” என்ற பதத்திற்கே அர்த்தம் தொலைந்து போவது மாதிரி உணர்ந்தேன்.
கணவனால் கைவிடப்பட்ட பெண், சொத்துக்களால் ஏமாற்றப்பட்ட ஆண்-பெண், பிள்ளைகளை வளர்க்க ஜீவனாம்சம் தேடி வந்த பெண் இன்னும் தள்ளாத வயது முதியோர் என பலதரப்பட்ட மக்கள் தம் நியாயத்திற்காக கூட்டில் ஏறி இறங்கியபடி இருந்தார்கள்…
ஒன்று மட்டும் புரிந்தது… யாரும் யாரையும் புண்படுத்தாத வாழ்வு வாழ்ந்தால் இந்த நீதி முறையின் தேவை யாருக்கும் இருக்காது! ஆனால் யாரும் அப்படி வாழ்வதாகத் தெரியவில்லை.
என் சிந்தனை ஓட்டத்தைக் கலைக்கும் வண்ணம் எனது அக்காவினுடைய இலக்கத்தை அழைத்தார்கள்.
கண்களால் அவளுக்குத் தைரியம் சொல்லியபடி அவளை அனுப்பிவைத்தேன். மறுபக்கத்தில் எதுவுமே அறியாத அப்பாவி போல அவனும் போய் நின்றான்.
உண்மை சொல்லுவதாக சத்தியப்பிரமாணம் செய்த அக்கா தொடர்ந்து அவளது பெயர், வயது, தொழிலைக் கூறி முடிக்கவும் அவளது வழக்கறிஞர் “ஏன் அவள் விவாகரத்து கேட்கிறாள்? ” என்பதை சொல்லத் தொடங்கினார்…
அவள் கூட்டில் ஏறிய அந்தக் கணம் என் உடல் சிலிர்த்துக் கொண்டது… மறுபக்கத்தில் தெரிந்த அவனைப் பார்க்கிறேன்… உடல் பதறியது. இறுதியாக அவளை கூட்டுக்குள் ஏற்றி விட்டாயே என எண்ணும் போது கண்கள் கலங்கின…
அங்கு தான் எனக்குள் இருந்த என்னை நான் உணர்ந்தேன்… அவளுக்கு நான் நேர்மாறு… வீட்டார், சுற்றத்தார் எதிர்க்க எதிர்க்க நானும் ஒருவனை காதலித்திருந்தேன். என்ன வித்தியாசம்! அவளுக்கு நேர்ந்தது பெற்றோர் பார்த்த வரனால்… எனக்கு நேர்ந்தது நானே தேடிக் கொண்ட வரனால்…
அவளுக்கு அவன் அடித்த போது ஆறுதல் படுத்த ஆயிரம் பேர். ஆனால் எனக்கு விழுந்த அடிகளைப் பற்றி அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம்.
அந்த கூட்டுக்குள் என்னையும் எதிரில் நின்ற அத்தானுக்குப் பதிலாய் என்னால் பிரியப்பட்ட காதலனையும் நிறுத்திப் பார்க்கின்றேன்…
நிச்சயம் திருமணம் முடிந்திருந்தால் எனக்கும் இந்தக் காட்சி நடந்தேறி இருக்கும்… நல்ல வேளை…
ஆறு வருட காதலை அடிவாங்கி வாழமுடியாத பட்சத்தில் முறித்துக் கொண்ட நல்ல நிகழ்வை நினைத்துப் பார்க்கின்றேன்…
நெஞ்சம் விம்மிய போதும் எடுத்துக் கொண்ட சரியான முடிவு இவ்விடத்தில் சந்தோஷத்தை தந்தது…
மெல்ல என்னைச் சுதாகரித்து நினைவுகளில் இருந்து விடுபட, அவளும் கூட்டில் இருந்து இறங்கி வர நேரம் சரியாக இருந்தது…
அவளிற்கு மூன்று மாதத்திற்குள் விவாகரத்து கிடைத்து விடும். அவளது முகத்தில் சந்தோஷம், எனக்கும் தான்! என் விடுதலை பற்றி…
ஆனால் அவளுக்காக சந்தோஷப்படுவது போல் காட்டிக்கொண்டேன். வெளியில் வந்து “ஆட்டோ” பிடித்து வீடு வரும் போது… பல கதைகளுக்கிடையில் “இப்போதுதான் பல்கலைக்கழகத்தில் நீ இறுதி வருடம் என நினைத்துக் கொள்! (அப்போது தான் அவளிற்கு இந்தத் திருமணம் பேசப்பட்டது) நீ பழைய அக்கா… இன்றிலிருந்து உனக்கு புது வாழ்க்கை என்றேன்… சிரித்தாள்…
அப்படி என்றால் நான்… ஆம் ஆறு வருடத்திற்கு முன் செல்ல வேண்டும். இப்போது தான் எனக்கு ஏ.எல்(high school) பெறுபேறு வந்திருக்கின்றது…
இன்றிலிருந்து எனக்கும் புது வாழ்க்கை….
மனதிற்குள் சிரித்த படி அவளைப் பார்க்கின்றேன்…
“உன்னுடையது தீர்ப்பிற்கு வந்த வழக்கு… என்னுடையதோ தீர்ப்பிற்கே வராத ஆனால் தீர்க்கப்பட்ட வழக்கு” என சொல்ல நா துடித்தது…
இருந்தும் என்னை மெல்லக் கட்டுப்படுத்தி, “ஆட்டோ” வின் வேகத்தால் காற்றலை பட்டு முகத்தில் விழுந்த முடிக்கற்றைகளை மெல்ல ஒதுக்கி விடுகின்றேன்…

Short Story : பெண்ணைப் பெண்ணாக…….

இனிய இலையுதிர் கால மாலைப்பொழுது….
“பேர்ன்” நகர ரயில் நிலையத்தில் இறங்கி என் நண்பனைப் பார்க்க நடந்து கொண்டிருந்தேன்.
காலடியில் மிதிபட்டு சருகுகள் எழுப்பும் ஒலி மனதிற்கு இதமாக இருந்தது. சூரியனின் வெம்மை சுட்ட பொழுதும் எங்கிருந்தோ வந்த குளிர் காற்று என் முள்ளந்தண்டு வரை ஊடுருவிச் சென்றது.
குளிர் காற்றில் இருந்து தப்பிக்க என் நடையை விரைவுபடுத்துகின்றேன்.
ஐந்து நிமிட வேக நடையின் பின்னர் அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் முன்னால் நிற்கின்றேன்.
மாலை வேளை என்பதனால் இன்னும் கதவுகள் திறந்தபடியே தான் இருந்தன.
உள் நுழைந்து மூன்றாம் மாடியை அடைகின்றேன்.
அங்கு தான் அவன் தன்னை மறந்து ஆராய்ச்சிகளில் மூழ்கியிருப்பான்.
ஓ … சொல்ல மறந்துவிட்டேன்.. அவன் இரசாயனவியலில் டாக்டர் பட்டம் வாங்கியவன். இப்பொழுது ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றான்.
இந்தியன் ஆனாலும் தமிழன்.
“கனாக் காணும் காலங்கள் … கலைந்தோடும் நேரங்கள் … கலையாத கோலம் போடுதோ ….” என்ற 7ஜி ரெயின்போக்காலணி பாடல் காற்றில் மெல்ல தவழ்ந்து வந்தது.
ஓ …… அவன் உள்ளே தான் இருக்கின்றான்.
பாடல்களைக் கேட்டபடியே ஆராய்ச்சி பண்ணுவது அவன் வாடிக்கை ….
“ஹய் … என்ன நடக்குது?” என்றேன்.
பதிலுக்கு “ஹாய்” சொன்னவன் “பத்து நிமிஷத்தில் வேலை முடிஞ்சிடும் வெயிட் பண்ணு சேந்தே போய்க்கலாம்” என்றான்.
எம் இருவருடைய பீடங்களும் அருகருகே இருப்பதனாலும் இருவரும் ஒரே விடுதியில் வசிப்பதனாலும் மாலையில் ஒன்றாகச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தோம்.
என் நல்ல நண்பன்…ஆரம்பத்தில் தெரிந்தவர்கள் என்று யாருமே இருக்கவில்லை. அவன் தான் முதலில் நண்பனானான். அது மொழி இணைத்த பந்தம்.
பெரும்பாலும் நமது பேச்சு தமிழ் சினிமா பற்றியதாகவே இருக்கும். ஏனெனில் அரசியல், போராட்டம் பற்றிக் கதை வந்தால் அங்கு எம்மை அறியாமலே முரண்பாடுகள் தோன்றிவிடும். இந்த விடயத்தில் அவன் இந்தியனாகவும் நான் இலங்கைத் தமிழாகவும் பிடிவாதமாக இருக்கக் கற்றுக் கொண்டோம்.
இதைவிட குடும்பம், உறவு என்று கதை வரும் போது அங்கு இயல்பான அக்கறையை ஒருவர் மேல் ஒருவர் செலுத்துவதும் இருக்கத்தான் செய்தது.
போகும் வழியில் “இந்தியக் கடை” ஒன்றில் தொலைபேசி அட்டை ஒன்றை வாங்கிக் கொண்டான் … நிச்சயம் அது அவனுடைய அக்காவுடன் கதைப்பதற்காகத் தான் இருக்கும்.

அந்தப் பாசத்தினைப் பார்த்து பலதடவை நானே வியந்திருக்கின்றேன்
அப்படியொரு பாசம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு எஸ்.எம்.எஸ் எப்பொழுதெல்லாம் அக்காவை “மிஸ்” பண்ணுகின்றானோ அப்பொழுதெல்லாம் “மிஸ்ட் கோல்கள்” மாலையில் குறைந்தது அரை மணி நேர உரையாடல்.
பாசம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் கட்டிப்போடுகிறது என்று நினைத்துக் கொள்வேன்.
ஆனாலும் பின்பு, அக்கா தன் குடும்ப உறவில் சந்தோஷமாக இல்லை என்பதை அறிந்து கொண்டே போது தான் அவனின் அளவற்ற பாசத்திற்கு நியாயம் காண்பிக்க முடிந்தது.
வீட்டில் பேசி முடித்த திருமணம் தான். மாப்பிள்ளை “கட்டினா அக்காவைத் தான் கட்டிப்பேன்” என்று ஒற்றைக் காலில் நின்றாராம்.
எல்லாம் தாலி கட்டும் வரையில் தான். தாம்பத்தியத்திற்கு அறிகுறியாய் ஒரு குழந்தை வேறு.
அத்தோடு தொலைந்து போனது தான் வாழ்க்கை. மனைவி, பிள்ளையை அடியோடு கவனிப்பதில்லை. தேவைப்பட்டால் மட்டும் பார்த்துவிட்டு தன் தாய் வீட்டிலேயே தங்கிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை. செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. அன்பாய் வெளியே அழைத்துச் செல்வதில்லை. ஏன் அன்பாய் பேசுவது கூட இல்லை. என் நண்பன் சொல்லித்தான் இப்பொழுது அவள் வேலைக்குச் செல்கின்றாள் தன் தாய்வீட்டிருந்து. அது கூட வேலைக்குப் போகும் அந்த கொஞ்ச நேரம் என்றாலும் அக்கா கவலையை மறந்து இருக்க வேண்டும் என்பதற்காகத் தானாம்.
கதையைக் கேட்கவே மனதுக்குள் ஏதோ செய்தது.
அக்காவின் மேல் இரக்கத்தை விட முகம் தெரியாத நண்பனின் அத்தானின் மேல் தான் கோபம் வந்தது …
“நான் மட்டும் அவனுக்கு மனைவியாக இருக்க வேண்டும். இந்த நேரத்திற்கு அவனை உண்டு இல்லை பண்ணியிருப்பேன் ” என நினைத்துக் கொண்டேன்.
அன்று இரவு நித்திரையேயில்லை. முகம் தெரியாத அப்பெண்ணின் சோகம் என்னை முழுதும் வியாபித்திருந்தது.
யன்னலினுடாக சூரியக் கதிர்கள் கண்களில் பட மெல்ல கண் விழிக்கின்றேன்.
ஓரிரு நிமிடங்களுக்கு கூசிய கண்களை இரண்டு கைகளாலும் துடைத்தபடி எழுந்து நாட்காட்டியைப் பார்க்கின்றேன் …
“ஓ … இன்று ஒக்டோபர் 20 …” எனது இன்னொரு நண்பனுக்குப் பிறந்தநாள். தொலைபேசியை எடுத்து அவனது இலக்கங்களை அழைக்கின்றேன். “ஹாய் ஹப்பி பேர்த்தே டூ யூ” என்றேன். பதிலுக்கு நன்றி கூறியவனிடம் “இண்டைக்கு மத்தியானம் என் ஹோஸ்டலுக்கு வாங்க. இரண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்” என அவனை மதியச் சாப்பாட்டிற்கு அழைக்கின்றேன்.
“பன்னிரெண்டு மணிக்குத் தான் வேலை முடியும். முடிய வாரன்” என்றான். அவன் இலங்கை அகதித் தமிழன். எனது பல்கழைக்கழக உணவுச்சாலைக்கு அடிக்கடி உணவு உண்ண வருவான். அப்படித்தான் அந்த நட்பு அறிமுகமானது…அவன் அதிகம் படித்திருக்கவில்லை. பதினெட்டு வயதிலேயே சுவிற்சலாந்திற்கு அகதியாய் ஓடிவந்தவன். பிழைப்பிற்காக இந்நாட்டு மொழியைக் கற்று ரெஸ்டோரண்ட் ஒன்றில் வேலை செய்கின்றான். இங்கு அகதி அந்தஸ்துப் பெற்று வாழும் ஆயிரம் இலங்கைத் தமிழர்களில் அவனும் ஒருவன்.
அவன் பெரும்பாலும் தமிழர்களின் போராட்ட வாழ்க்கை, அந்நிய தேசத்து வாழ்க்கை, குடும்பச் சுமைகள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பான்.
அதிகம் படித்திருக்கவில்லையே ஒழிய நிறையவே வாழ்க்கையில் அடிபட்டிருந்தான்.
அவன் உழைத்து தானும் வாழ்ந்து இலங்கையில் உள்ள அவன் குடும்பத்தையும் பார்க்கின்றான். அவனிற்கும் ஒரு அக்கா. அத்தான் நிரந்தரக் குடிகாரன். நான்கு பிள்ளைகள் வேறு. இவன் பனியிலும் குளிரிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை அவர் விஸ்கியிலும், பிராந்தியிலும் செலவழித்துக் கொண்டிருந்தார். குடித்துவிட்டு மட்டும் வீட்டிற்கும் வந்திருந்தால் பிரச்சினையில்லை. அதைவிட வீட்டிற்கு வந்து சத்தம் போடுவது, அக்காவிற்கு அடிப்பது, குழந்தைகளை படிக்கவிடாமல் செய்வது இவைதான் அவனை இன்னும் கவலைப்பட வைத்தது.
என்னைக் காணும் போதெல்லாம் அவனின் அக்கா பற்றியே பேசுவான்.
அவன் சோகம் அவன் விழி ஓரங்களில் தெரியும்.
மதியம் அவன் வர லேட்டாகி விட்டது. கூடவே எனக்கு சமையலில் ஒத்தாசை செய்தான்.
சமைத்து முடித்துப் பரிமாறிய போது “ஏழு வருடங்களுக்குப் பிறகு அக்காட கையால் சாப்பிடுறது போல இருக்குறது” என்றான்.
மெல்ல புன்னகைத்து அவனின் சந்தோஷத்தை உள்வாங்கிக் கொண்டேன்.
அப்போது தான் அந்த தொலைபேசி அழைப்பு அவனுக்கு வந்தது.
இலங்கையில் இருந்து அவனின் தம்பி.
“அண்ணா வீட்டிற்கு அவசரமாய் கோல் எடுங்கோ” என்று சொல்லிவிட்டு வைத்திருந்தான்.
இவன் தன்னிடமிருந்த தொலைபேசி அட்டைமூலம் மீண்டும் இலங்கைக்குக் கோல் எடுக்க அழைப்பை எடுத்தது அவனது அக்கா.
தொடங்கும் போதே அழுது கொண்ட தான் பேசினார். நான் அருகிலேயே நின்றதால் அக்கா கதைப்பது அப்படியே கேட்டது.
இன்றும் குடித்து விட்டு வந்திருக்கிறார் கணவன். இவன் அனுப்பும் வெளிநாட்டுக் காசின் சுகம் கண்டதாலோ என்னவோ கடந்த ஐந்து வருடங்களாக வேலைக்கே போவதில்லை. இன்று அக்காவை மாடிப்படிகளில் இருந்த தள்ளிவேறு விட்டிருக்கிறர்; நெற்றியில் காயம். “நாங்க சின்னப் பிள்ளைகளாக இருக்கேக்க எங்கட அப்பா எப்படியெல்லாம் எங்களை வளர்த்தார். ஆனா இண்டைக்குப் என்ர பிள்ளைகளுக்கு ஒரு குடிகார அப்பா அம்மாவை அடிக்கிர அப்பா. வேலைக்குப் போகாத அப்பா. நான் என்ன பாவம் செய்தனான்.” என்று விம்மி விம்மி அழுகிறாள்.
இந்த அழுகையோடு “தம்பி பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்கிறாள்.
“நல்ல வாழ்த்துச் சொல்றீங்க” என்று தொடங்கியவன் “இது நீங்க தேடின மாப்பிள்ளைதானே. காதலிக்கேக்க உங்களுக்கு தெரியேல்லயா அவர் ஒரு குடிகாரர் என்று” என ஏசுவதற்கு தொடங்கியவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை உடனே குரலை தாழ்த்தி “ ஆம்பிளைகள் என்றால் அப்பிடி இப்படி இருக்கத்தான் செய்வாங்க... அக்கா நீங்கதானே பொறுத்துப் போகோணும்” என்று ஆறுதல்படுத்தினான். பல நிமிடங்களுக்கு ஆறுதலாகவே கதைத்தவன் “காட் முடியப்போகுது… இரவு எடுக்கிறன்” என்று செல்லி அழைப்பை துண்டித்தான்.
“சாப்பிடுங்க..” என்ற எனது குரலுக்கு சுய நினைவுக்கு வந்தவன் “எப்படி சாப்பிடுறது பார்த்தீங்க தானே தினம் தினம் அக்கா படுற வேதனையை பார்த்தா அத்தானை விட்டுட்டு வா எண்டு சொல்ல நினைக்கிறன். ஆனா தம்பி நானே எப்பிடி அப்படி சொல்லுறது. அதனால பொய்யா ஆறுதல் செல்ல வேண்டி இருக்கு” என்றவன் கடமைக்காக இரு வாய் உண்டு விட்டு கையை கழுவிக்கொண்டான்.
அவனுக்காக நான் ஏற்பாடு செய்த சின்ன சங்தோஷமும் காற்றில் கரைந்து போகிறது.
பின்னேர வேலைக்கு நேரமாகிவிட்டதால் “பிறகு சந்திக்கிறன்” என்று கூறி விடைபெற்று அவன் சென்றாலும் என் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை “சே … பெண்ணா பிறந்தா அதுவும் நம்ம நாடுகளில் பிறந்தா எவ்வளவை அனுபவிக்க வேண்டியிருக்கு ” என்று மனதுக்குள் அழுது கொள்கின்றேன்.
மாலை வழக்கம் போல் என் விடுதியில், என் இந்திய நண்பனுடன் இரவு உணவு உண்டு கொண்டிருந்தேன். என் கை தானாகவே உணவை எடுத்து வாயில் வைக்கிறது … ஆனால் மனம் உணவில் வயிக்கவில்லை. மனத்தின் ஏதோ ஒரு மூலையில் இனம் புரியாத வலி.
இடையில் அவனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருக்க வேண்டும், உணவு உண்பதை நிறுத்தி விட்டு அதனை வாசிக்கிறான்.
விடயம் நல்லதல்ல என்பதை அவனது முகம் சொல்லிவிடுகின்றது.
“என்ன, ஏதாவது பிரச்சனையா?” என்றேன்
“இல்ல அக்கா எஸ்.எம்.எஸ் பண்ணியிருக்கா”
“என்ன இப்ப சாமம் மூன்று மணி இருக்குமா? அக்கா இன்னும் நித்திரை கொள்ளேலயா?”என்றேன்..
“தூக்கம் வந்திருக்காது அதனால பண்ணியிருப்பா” என்று சொன்னவன் சில விநாடிகள் மௌனத்தின் பின்.
“அத்தான் சொன்னாங்களாம், அக்கா விலகிப்போற மாதிரி தெரியுதாம்.
காரணம் தெரியல்லயாம். கவுன்சிலிங்குக்கு கூட்டி போகப் போறாராம்.
அக்காவும் ஆமான்னு சொல்லிட்டாங்களாம்” என்று கூறி முடித்தான்.
“குடும்பத்த கவனிக்க அக்கா வேலைக்குப் போனா ஏன் இந்த மனுசன் இப்படி பண்ணுறார். புருஷன் மாதிரி நடக்கத் தெரியேல்ல. அவருக்கு தான் முதல்ல கவுன்சிலிங் பண்ணேனும். எதுக்கு இப்படி அக்காவ சித்திரவதை பண்ணுறார் என்றே புரியல்ல” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான்.
“நாளைக்கு காலேல அக்காவுக்கு போன் பண்ணோணும்.என்ன சொல்றது
பொறுத்துப் போங்க என்று மட்டும் தானே சொல்லேலும். “ என்றவன் பாதியிலேயே உண்பதை நிறுத்திக் கொண்டான்.
“மனசு சரியில்ல. நான் தூங்கப் போறன். விடியப் பாக்கலாம்.” என்றவன் என் பதிலுக்கு காத்திராமலே வெளியேறி அவன் அறைக்கு போகின்றான்.
அமைதியாக கோப்பைகளை கழுவி அடுக்கி வைத்துவிட்டு எனது அறைக்குள் வருகின்றேன்…மதியம் ஏற்பட்ட வலியின் ரணம் குறைவதற்கு முன்னர் மீண்டும் வலி.அது எப்படி மனைவிமார்களை உடலாலும் மனதாலும் துன்புறுத்துவதற்கு சொந்தக் கணவர்களுக்கு மனது வருகிறது?
எனது மேசை விளக்கின் சுவிட்சை “ஒன்” பண்ணுவதும் “ஒப்” பண்ணுவதுமாக எனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தேன்.
நாடு, இனம், குலம், கோத்திரம் என்ற எல்லாப் பேதங்களையும் கடந்து இன்னும் பெண்கள் ஏதோ ஒன்றுக்காய் அழுது கொண்டு தான் இருக்கிறார்கள் …
இதில் மட்டும் எந்த பேதமும் இல்லை.
அந்த நிமிடம் தான் இந்த ஜரோப்பிய கலாச்சாரத்தின் மீது எனக்கு உடன்பாடு ஏற்படுகின்றது. ஒரு ஆணைப்பிடிக்காவிட்டால் அல்லது அவன் வாழ்க்கைக்கு ஒத்துவரமாட்டான் என்றால் எந்தப் பெண்ணும் எந்த நேரத்திலும் விலகிக் கொள்ளலாம். விவாகரத்துக்கள் இங்கு சர்வ சாதாரணம். விவாகரத்தான பெண்களை நம்மூர் மாதிரி யாருமே எதுவும் சொல்லமாட்டார்கள். குடும்ப அலகுகள் சிதைந்து போனாலும் .. இங்கு பெண்கள் அழுவதைக் காணமுடியவில்லை.
நம்மூரில் மட்டும் அடித்தாலும், வதைத்தாலும் “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன். “வாழுவதே கொஞ்ச காலம். அதற்குள் எத்தனை சொல்லமுடியாத வலிகளைத் தாங்குகிறாள் பெண்.
எனக்குள் உணர்வுகள் கலவையாகி என்னாலேயே புரிந்து கொள்ள முடியாத உணர்வு தோன்றுகின்றது. கோபம் வருகிறது. அதுவே கவலையாகி அழுகை வருகின்றது. பெண்கள் அழாத ஒரு சமுதாயம் வெறும் கனவு தான்.
கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி நித்திரை கொள்வதற்குத் தயாராகின்றேன்.
முகம் தெரியாத அத்தான்மார்களில் இருந்த என் கோபம். என் இரு நண்பர்களையும் நினைக்க இரக்கமாக மாறுகின்றது.
எங்கோ உணரப்படும் வலிகளுக்கு எங்கோ கண்ணீர் சிந்தப்படுகின்றன.
அதைத் தான் என்னால் தாங்கமுடியவில்லை.
இந்த எல்லா உணர்வுக் கலவைகளுக்கும் மேலாக மெல்லிதான சந்தோஷம் ஒன்று என்னுள் பரவுகின்றது” அது தான் என் இலங்கை நண்பனும் என் இந்திய நண்பனும் தம் தாய்நாடுகளில் ஒவ்வொரு பெண்களுக்கு வாழ்வளிப்பார்கள். கணவர்களாக மாறுவார்கள். ஆனால் நிச்சயமாக தமது அக்காமார்களுக்கு நடந்த துன்பங்களை தம் மனைவிகளுக்கு கொடுக்கமாட்டார்கள்
அந்த பெண்களின் உடலுக்கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பார்கள்
மனைவியை மனைவியாக, பெண்ணாக நடத்துவார்கள் ……”
அந்த மெல்லிய ஆனால் நிஜமான சந்தோஷத்துடன் உறங்கிப் போகின்றேன் …!

Tuesday, August 08, 2006

Poem: உதடுகள் பிரியாமல்....

பிரியமாய் பிரிந்த
உதடுகளுக்கு
உன்னுடன் பேசிக்கொள்ள
மட்டுமே முடிந்தது
முத்தமிடும்
கற்பனைகளை
களைந்த வண்ணம்....


பிரியாமல் அவை
சிலநேரங்களில்...
உன்னுடன் பேசுவதற்கு
மொழி இல்லாமலும்
முத்தமிடுவதற்கு
திறன் இல்லாமலும்....

பிரிந்தும் பிரியாமலும்
பலநேரங்களில்
என் உதடுகள்...
உன் கதைகளின்
வண்ணங்களை கேட்டவண்ணமே
முத்ததிற்கான ஆயத்தங்களுடன்...

ஆனாலும்...
என்று பிரியும்
என் உதடுகள்
என காத்திருக்கிறேன்
முத்ததிற்கான
நாள்நோக்கி...

அதுவரை..
எச்சில் முழுங்கி
தணித்துக்கொள்கிறேன்
என் முத்ததின்
தாகத்தையும்..
இது வரை
சொல்லாத
என் காதலின்
வார்த்தைகளையும்....

poem :என் தேசத்தில் நான் -சிறிய இடைவேளைக்குப் பின்னர்-

செம்புழுதி
தீண்டத் தீண்ட
விளையாடி திரிந்த
என் பிஞ்சுப் பாதங்கள்
செங்குருதி
தீண்டிவிடும் என்பதற்காய்
திரியாமல்
இருக்கின்றன...



புகையிலைத் தோட்டத்தினூடு
பனிமூட்ட காலையின்
பள்ளி சென்ற
பொழுதின் உயிர்ப்புக்கள்
சோதனைச் சாவடியினூடு
போர்மூட்ட சாலையில்
ஏனோ கிடைக்கவில்லை?..



பனம் பழங்கள்
பொறுக்கிய
தோப்புக்கள் எல்லாம்
வெறுமையாய்...
திரும்பிப் பார்க்கின்றேன்
அவை
சோதனைச் சாவடிகளை
அலங்கரித்திருந்தன!



சந்தேக துன்புறுத்தல்களினால்
அடையாளங்களை
மூடிக் கொள்கிறேன்..
அடையாள அட்டை மட்டும்
விடாப்பிடியாய்
பிறந்த இடம் : இணுவில்
எனக் காட்டுகிறது.



தினம் விரும்பும்
என் துறைமுக சாலைகள்
இன்று
முட்கம்பி வேலிகளுக்குள்...
மனது மட்டும்
அதை ஊடறுத்துப்
பார்த்து
காயம் பட்டுக் கொள்கின்றது




என் வீதிகளில்
வரும்
த..யீ..ர்.. என்ற
தயிர்க்காரி
வருவதேயில்லை.
வரவே முடியாதோ
என்று நினைக்க மட்டும்
எனக்கு
சக்தியேயில்லை!!!


பஸ் பயணங்களில்
என்னை மறந்திருக்கும்
நான்
இப்போதெல்லாம்
கந்த சஸ்டி கவசத்துடன்
கிளைமோர் ஒன்றும்
வெடிக்காமல் இருக்க!
காக்க காக்க
கனகவேல் காக்க...



பாதம் வருடும்
அலைகள்
அளைய பிரியமாய்
இருக்கின்றேன்..
மனித வேட்டைகளால்
மனிதர்கள்
போவதில்லை என்ற
உண்மை
உறைக்காமல்!!!


இராணுவச் சிப்பாயின்
நீ யார்? ? என்ற
கேள்விக்கு
"இலங்கையன்" ( Sri Lankan)
எனச் சொல்லத்தான்
ஆசைப்படுகின்றேன்?.
அவன் என்னை
"இலங்கைத் தமிழனாய் ( Sri Lankan Tamil)
பார்க்கின்ற போதும்??


.........
பிறந்த நற் பொன் நாடு
நற்றவ வானிலும்
நனி சிறந்தது .. என
யார் சொன்னார்கள்?
திருத்தி எழுதிக் கொள்ளுங்கள்!!
நாங்கள் சொந்த நாட்டில்
தான்
நரகத்தில் உழல்கின்றோம்!!!


வலிக்கும் போதெல்லாம் இன்னும் தொடரும்!!!

Monday, August 07, 2006

Poem :கறுப்பும் சிவப்பும் நீலமும் !!!

நெடுவான நீட்சியில்
கிறங்கிக் கொள்ள
துடித்தாலும்
எச்சில் இலையில்
சப்பித் துப்பிய
எலும்புகளுக்கான போட்டியில்
உலர்ந்து விடுகிறது மனது!

பிறந்த பிஞ்சுகளுடன்
பிச்சை எடுக்கும்
சோகமும்
சீழ் வடியும் கால்களுடன்
ஊர்ந்து திரியும்
அவலமும்
மாறுவதாகத் தெரியவில்லை.

சாக்கடைகளின்
வெதும்பிய மணமும்
கொசுக்களும் நுளம்புகளும்
வீதியோர
பத்து ரூபாய்கான
விபச்சாரங்களும்
இன்னும் என் தேசத்தின்
சொத்துக்கள் தான்?

நாய்களுக்கு மாருதிகளும்
மனிதர்களுக்கு தெருவோரங்களுமாக
வாகனப் புகையின்
தூசி படர்ந்து
கறுப்பு நிறமாகத்தான்
இருக்கிறது
எங்கள் வறுமை.

போரின்
செங்குருதி
சிந்தப்பட்டிருந்தும்
சுனாமியின்
நீல அலைகள்
ஆக்கிரமித்திருந்தும்
கறுப்பு நிறமாகத்தான்
இருக்கிறது
எங்கள் தேசம்!

இன்னும்
அடர்ந்து படர்ந்து
கறுப்பு நிறமாகத்தான்
இருக்கிறது
எங்கள் வறுமை?!!!